தமிழகத்தில் தற்பொழுது, ஊரடங்கு உத்தரவானது தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக, மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, சாலைகளிலும், கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த வருகின்றனர். இதனால் சமூகத் தொற்று ஏற்படும் அபாயம் உண்டானது.
இதனையடுத்து, தமிழக அரசு முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. அதன்படி, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான சோமட்டோ மற்றும் டான்சோ மூலம், பால் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழக அரசு செய்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், அதிநவீன பாலகங்கள் மூலம் நுகர்வோரின் வீடுகளைத் தேடிச் சென்று பால், பால் உபபொருள்கள் வழங்குவதற்காக சோமட்டோ, டான்சோ உள்ளிட்ட நிறுவனங்களுடன், ஆவின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஊரடங்கு நிலவி வருகின்ற நிலையில், சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி, பால் மற்றும் பால் உபப்பொருட்கள் கிடைக்கும் என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.