உடம்பு சரியில்லையே எப்படி ஆன்மீக அரசியல் சாத்தியம்? ரசிகர்கள் குழப்பம்!

28 December 2020 சினிமா
rajinikanthdoordarshan.jpg

உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது சென்னை திரும்பியுள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

வருகின்ற டிசம்பர் 31ம் தேதி அன்று, தன்னுடைய அரசியல் கட்சிக் குறித்தும், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்க உள்ளேன் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக, அவர் ஹைதராபாத் சென்றிருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பணி புரிந்து வந்த நான்கு பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், படப்பிடிப்பானது ரத்து செய்யப்பட்டது. மேலும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில், ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், 70 வயதினைக் கடந்தவர் என்ற முறையில், அவரிடம் 2வது முறையாகவும் சோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. ஆனால், அவருடைய உடலில் இரத்த அழுத்தத்தில் திடீரென்று மாறுபாடு ஏற்பட்டதால், அவர் ஹைதரபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரை முழுமையாகப் பரிசோதித்தனர். அதில், அவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை எனவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அறிக்கை வெளியானது. இந்நிலையில், உடல்நலம் சீரானதால், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த், சென்னை வந்தடைந்தார். இந்த சூழலில், அவர் கட்சி ஆரம்பிப்பாரா, அது குறித்த பணிகளை அவரால் மேற்கொள்ள முடியுமா, அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது குறித்தப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இவருடைய இந்த உடல்நலம் குறித்தும், அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் ரஜினியின் ரசிகர்கள் கடுமையாக சோகமடைந்து உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்கள் பொறுத்திருந்தால், கட்டாயம் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகிவிடும்.

HOT NEWS