மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்த, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம்மிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் பிறந்து வளர்ந்த நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம், 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்றக் குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர். இவரை தற்பொழுது வரை, இந்தியா உட்படப் பல நாடுகள் தேடி வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தாவூத் இப்ராஹிம்மினை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்தன.
மேலும், அவரை தேடவும் செய்தன. அவர் பாகிஸ்தானில் இருப்பதாக தற்பொழுது வரைக் கூறப்படுகின்றது. ஆனால், அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு இரகசியமாக தகவல் அளித்துள்ளார்.
அதில் தாவூத் இப்ராஹிம்மிற்கும், அவருடைய மனைவி சூபினா ஷெரீனிற்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். அவருடைய வீட்டுப் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.