தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக மக்கள் அதிகம் வழிபடும் தெய்வமாக முருகப் பெருமான் இருந்து வருகின்றார். முருகனுக்கு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்டப் பல நாடுகளில் வழிபாடு முறையானது நடைமுறையில் உள்ளது. முருகனுக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில், தைப்பூசத் திருவிழாவானது பிரசித்திப் பெற்றது. இந்த விழாவிற்கு முருகனுடையக் கோவில்களுக்கு, தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்த பக்தர்கள் குவிந்து விடுவர்.
இந்த சூழலில், தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரும், பாஜகவினரும் தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, பல காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை முன்னிட்டு, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதன்படி, வருகின்ற ஜனவரி 28ம் தேதி தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொதுவிடுமுறையினை அறிவித்து உள்ளார்.
மேலும், இந்த அரசு பொதுவிடுமுறையானது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனவும் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்த அரசாணையும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பாஜக கட்சியின் தலைவரும் தங்களுடைய வரவேற்பினை தெரிவித்து உள்ளனர்.