இனி வாழை இலையில் தான், மதிய உணவு வழங்கப்படும் என, மகேந்திரா நிறுவனர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்து உள்ளார்.
மகேந்திரா நிறுவனம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில், பல ஆயிரம் பேர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அத்தியாவசியப் பணிகளுக்கான ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளரான பத்மா ராம்நாத், ஆனந்த் மகேந்திராவிற்கு வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். அதில், உங்கள் கேன்டீனில் வாழை இலையில், உணவு வழங்கலாமே என்று கேட்டுள்ளார். அதனை, தன்னுடைய நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார் ஆனந்த் மகேந்திரா.
பின்னர், அதனை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டும் உள்ளார். தற்பொழுது, மகேந்திரா நிறுவனத்தின் அனைத்து கேன்டீன்களிலும், மதிய உணவானது வாழை இலைகளில் பரிமாறப்படுகின்றது. இது குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள மகேந்திரா, இவ்வாறு செய்வதன் மூலம், வாழை விவசாயிகள் பலனடைவர் என்றும் கூறியுள்ளார். இது தற்பொழுது, அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.