அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற போராட்டத்தில், 10,000க்கும் அதிகமானோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் மினிசோட்டா மாகாணத்தினைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர், கடந்த வாரம் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களிலும், கருப்பின மக்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி, பலரும் பலக் கடைகளை உடைத்து பொருட்களை சூரையாடி வருகின்றனர். பல இடங்களில், போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளனர். மேலும், ஒரு சிலர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய அளவிலான அசாத்திய சூழலானது, அமெரிக்காவில் உருவாகி உள்ளது.
இந்த போராட்டத்தினை உடனே நிறுத்தும்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகின்றார். இந்த சூழ்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைத் தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் 10,000க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம், போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.