உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்த, கஜேந்திர தப்பா மஹார் மரணமடைந்தார்.
நேபாள நாட்டின் பாக்லங் மாவட்டத்தினைச் சேர்ந்த கஜேந்திர தப்பா மஹார் என்பவர், உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையைப் புரிந்திருந்தார். அவர் 67.08 சென்டி மீட்டர் (2 அடி 2.41 இன்ச்) உயரம் மட்டுமே உடையவர்.
அவர் தன்னுடைய 27வது வயதில், நிம்மோனியா காய்ச்சல் காரணமாக மரணமடைந்ததாக, அவருடைய சகோதரர் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி, கஜேந்திரா மஹார் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நகரக் கூடிய மற்றும் நகர முடியாத குள்ளமான மனிதர்களின் பட்டியலில், கஜேந்திரா முதலிடம் பிடித்தவர். ஆனால், நேபாள நாட்டினைச் சேர்ந்த பிலிப்பினோ ஜுன்ரே பாலாவிங் என்பவர் நகர முடியாத குள்ளமானவர்களின் பட்டியலில் சாதனைப் படைத்தார். அவர் கடந்த 2015ம் ஆண்டு இறந்ததை அடுத்து, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மஹார், மீண்டும் கின்னஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இதனிடையே, தற்பொழுது மஹாரும் மரணமடைந்துள்ளார். இதற்கு கின்னஸ் வேல்ட் ரெக்கார்ட் அமைப்பு தங்களுடைய, ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துள்ளது.