டெல்லியில் ஜாமியா மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, பிரியங்கா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வந்தனர். அப்பொழுது, அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்களை அரங்கேற்றினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் களைத்தனர்.
இதற்குப் பல தலைவர்களும், தங்களுடையக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில், டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட்டினை அடைந்த பிரியங்கா காந்தி, தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், அம்பிகா சோணி, குலாம்நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். இதனை அப்பகுதிப் போலீசார் எதிர்பார்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி, போராட்டத்தில் ஈடுபட்டதால், சற்று நேரத்தில் மாபெரும் கூட்டம் திரண்டுவிட்டது. அவர்கள், அனைவரும் இணைந்து மாணவர்கள் தாக்குதலுக்கு எதிராக தங்களுடையக் கூக்குரலை எழுப்பினர்.
அப்பொழுது, செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா மாணவர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அமைதியாகப் போராடும் மாணவர்கள் மீது, போலீசார் இது போன்ற தாக்குதல்கள் நடத்தியது தண்டனைக்குரியது. பாஜக எம்எல்ஏ பாலியல் குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பற்றி, பிரதமர் மோடி பேசுவாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.