வரும் 2022ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களிலும், அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட உள்ளது என, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நேற்று, நடைபெற்ற தேசிய பிராட்பேண்ட் இயக்கத்தினைத் தொடங்கி வைத்த அவர் பேசும் பொழுது, தற்பொழுதுள்ள 5 லட்சத்து 60 ஆயிரம் டவர்களானது, 10 லட்சம் டவர்களாக உயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் கிலோமீட்டருக்கு ஆப்டிகல் பைபர் இணைப்பு உருவாக்கப்பட உள்ளது எனவும் பேசினார்.
இந்தத் திட்டத்திற்காக, மத்திய அரசு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கானப் பங்குகளை விடுவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்து இரண்டரை ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும், அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கபட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.