இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவ ஆரம்பித்து நிலையில், தற்பொழுது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல், சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களில் 50 சதவிகிதத்தினர் வீட்டில் இருந்தபடியே, வேலைப் பார்க்கவும் அனுமதி அளித்துள்ளது. தற்பொழுது வரை இந்தியாவில் 165 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 4 பேர் இந்த நோய் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
சர்வதேச விமானங்களை 29ம் தேதி வரை இயக்கத் தடையும் விதித்துள்ளது. ரயில்கள், விமானங்களில் சலுகை கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை வெளியில் விடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவசர சேவை, அத்தியாவசிய சேவை செய்யும் ஊழியர்களைத் தவிர, மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் உரிய மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளை, தெளிவாக வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போல், உயரதிகாரியின் உத்தரவுப்படி, மத்திய குரூப் பி மற்றும் சி ஊழியர்கள் மாற்றுத் தினங்களில் பணிபுரியவும் உத்தரவிட்டுள்ளது.