2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதா என்பதை விசாரிக்க, இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு, இந்தியாவின் வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாகவும், எங்கள் வீரர்கள் உலகக் கோப்பையை விற்றுவிட்டதாகவும், மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாகவும், அவ்வாறு மேட்ச் பிக்சிங் நடைபெறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இலங்கையே கோப்பையை வென்றிருக்கும் என, பிரபல இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டின் காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் மீது புதிய களங்கம் உருவாகி உள்ளது. இதனைத் துடைப்பதற்காகவும், உண்மையினைக் கண்டறிவதற்காகவும், இலங்கை கிரிக்கெட் வாரியம் அப்பொழுது அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.