வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது, மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இதில், டி20 தொடரினை இந்திய அணிக் கைப்பற்றியது. இதனையடுத்து, நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. நவம்பர் 22ம் தேதி, கொல்கத்தாவில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இரவு பகல் போட்டியாக நடதப்பட்டது. இதில் பிங்க் நிறப் பந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் வீரர்கள், வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கேப்டன் கோலி சதமடித்தார். இந்திய அணி 89.4 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் குவித்தது. தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை நேற்று வங்கதேச அணி ஆரம்பித்தது.
அந்த அணியின் வீரர்கள் 41.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இஸ்லாம் 0, இம்ரூல் கையீஸ் 5(15), மோமீனுல் ஹக்கீயூ 0(6), மொஹமத் மிதுன் 6(12), முஸ்பிகுர் ரஹீம் 74(96), மஹ்மதுல்லா 39(41), மெஹீதி ஹஸன் 15 (22), தைஜூல் இஸ்லாம் 11(24), எபாதத் ஹோசைன் 0(4), அல் அமீன் ஹோசைன் 21(20), அபு ஜயீத் 2(2) ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். முதல் இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா ஐந்து விக்கெட்டுகளை எடுத்து கலக்கினார். இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரினை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.